Connect with us

முக்கிய செய்தி

11 புரதான தலங்கள் புனித பூமிகயாக அறிவிப்பு ..!

Published

on

தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் அரச வர்த்தமானியின் ஊடாக தொல்லியல் சிறப்புமிக்க 11 வழிப்பாட்டுத் தலங்கள் புனித பூமியாக பெயரிடப்பட்டுள்ளன.

அந்தப் பகுதிகளை புனித பூமியாக பெயரிடுவதற்கான சன்னஸ் பத்திரங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் நேற்று (15) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

அதற்கமைய அனுராதபுரம் ஹொரவ்பொத்தான பிரதேச செயலக பிரிவின் அம்பகஸ்வெவ புராதன விகாரை, புத்தளம் தங்கொட்டுவ பிரதேச செயலக பிரிவின் பொதுவடன புராதன விகாரை, அம்பாறை பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முஹுது மகா விகாரை, கம்பஹா மாவட்டத்தின் தொம்பே பிரதேச செயலகத்திற்குச் சொந்தமான மெத்தேகம விகாரை, ஹம்பாந்தோட்டை உத்தகந்தர விகாரை, திருகோணமலை குச்சவௌி பிரதேச செயலகத்தின் ஸ்ரீ சத்தர்ம யுக்திக ஆசிரமம், குருணாகல் நாரம்மல பிரதேச செயலகத்தின் தம்பதெனிய விஜய சுந்தராராம விகாரை, குச்சவௌி பிரதேச செயலகத்தின் சாந்தி விகாரை, குருணாகல் குளியாபிட்டிய மேற்கு பிரதேச செயலகத்தின் ஸ்ரீ சுதர்மாராம புராதன விகாரை, கம்பஹா சித்த கபலே மல் சூனியம் தேவாலய, குச்சவௌி பிரதேச செயலகத்தின் யான் ஓயா விகாரை, சாகர புர சுமுதுகிரி வன ஆசிரமம் உள்ளிட்ட தலங்களே புனித பூமிகளாக பெயரிடப்பட்டிருக்கின்றன.

அதற்கமைய தற்போது வரையில் நாட்டின் 142 வழிபாட்டுத் தலங்கள் புனித பூமிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்போது புத்த சாசனத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசிலமைப்புக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அர்பணிப்புடன் செயற்படுவாரென ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதியின் வழிக்காட்டலின் கீழ் அரசாங்கம் புத்த சாசனத்தின் மேம்பாட்டிற்காக முன்னெடுத்துவரும் முயற்சிகள் குறித்து தௌிவூட்டிய ஜனாதிபதியின் செயலாளர், தேரவாத பௌத்த மத்தியஸ்தானமான மகா விகாரையின் ஆய்வுப் பணிகளை ஆரம்பிக்கவும், மகா விகாரை பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்கவும், கண்டி சர்வதேச பௌத்த அருங்காட்சியகத்தை நிர்மாணிப்பதற்கு அவசியமான திட்டங்களை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

வித்யோதய பிரிவெனாதிபதியும் காலி பிரதான சங்கநாயக்கருமான வண. பலாங்கொட சோபித தேரர், ஸ்ரீ லங்கா அமரபுர மஹா பீடத்தின் மகா நாயக்க தேரர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளருமான கந்துனே அஸ்ஸபி மகா நாயக்க தேரர், ராமக்ஞ மஹா பீடத்தின் மேல் மாகாணத்துக்கான பிரதான சங்க நாயக்கர் பேராசிரியர் வண. மெதகம நந்தவங்ச நாயக்க தேரர் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத், புத்த சாசன மற்றும் சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன, பௌத்த அலுவல்கள் பணிப்பாளர் நாயகம், பௌதீகத் திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் சன்னஸ் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள அழைக்கப்பட்டவர்களும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

புனித பூமி சன்னஸ் பத்திரங்களை வழங்குவதற்கு முன்னதாக இந்நிகழ்விற்கு வருகை தந்திருந்த மகா சங்கத்தினரால் ஜனாதிபதி செயலகத்தில் புண்ணியகர்ம பூஜைகளையும் நிகழ்த்தினர்.