Connect with us

முக்கிய செய்தி

விடுதியில் சடலமாக சிறுமி மீட்கப்பட்ட சம்பவம் நீதிமன்றில் ஆஜராகவுள்ள பாட்டி…!

Published

on

யாழ். திருநெல்வேலி பகுதியிலுள்ள விடுதியிலிருந்து 12 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில்,

சிறுமியின் பாட்டி (அம்மம்மா) கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக தெரியவருகிறது.

சிறுமி தனது பாட்டியால் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டமை உறுதியானதையடுத்து, 53 வயதுடைய ஓய்வுபெற்ற குடும்ப நல உத்தியோகத்தரான சந்தேக நபரை இன்று வியாழக்கிழமை (14) நீதிமன்றத்தில் பொலிஸார் முற்படுத்தவுள்ளனர்.

யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் நேற்று முன்தினம் (12) சிறுமியொருவர் சடலமாகவும் சந்தேக நபரான பாட்டி மயக்கமுற்ற நிலையிலும் மீட்கப்பட்டனர்.

அவ்வேளை சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், யாழ்ப்பாண மாவட்ட நீதவானும் நேரில் சென்று பார்வையிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

சிறுமி, திருகோணமலையில் தனது தந்தையுடன் வளர்ந்துள்ளார்.

இந்நிலையில், சிறுமியும் அவரது பாட்டியும் கடந்த 9ஆம் திகதி குறித்த விடுதியில் ‍அறையொன்றை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.

சிறுமிக்கு உளச்சிக்கல்கள் உள்ளதாகவும், அதற்காக தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற தாம் இருவரும் வந்திருப்பதாகவும் விடுதியில் அந்த பாட்டி கூறியுள்ளார்.

மறுநாள் அவர் வெளியில் சென்று வந்தார். அதன் பின்னர், இருவரும் நீண்ட நேரமாக அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த விடுதி நிர்வாகத்தினர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

அதனையடுத்து, பொலிஸார் விடுதி அறையின் கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்தபோது சிறுமி உயிரிழந்த நிலையிலும் பாட்டி மயக்கமுற்ற நிலையிலும் காணப்பட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து, சிறுமியின் பாட்டி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அத்தோடு, விடுதியில் இவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து கடிதம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தனக்கு மனநோய் இருப்பதாகவும், அதனால் தானும் தனது பேத்தியும் உயிரை மாய்த்துக்கொள்ளப் போவதாகவும் பாட்டி எழுதியதைப் போன்ற அந்த கடிதத்தின் அடிப்படையில் விசாரணைகள் தொடர்ந்து வரும் நிலையில்,

நேற்று (13) மாலை கோப்பாய் பொலிஸார் பாட்டியிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

அதேவேளை, சிறுமியின் சடலம் உடற்கூறாய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது ஆபத்தை ஏற்படுத்தும் மருந்து வழங்கப்பட்டே சிறுமி கொல்லப்பட்டமை தெரியவந்துள்ளது.

அதனை தொடர்ந்து, சந்தேக நபரான பாட்டி தனது பேத்திக்கு நஞ்சூட்டிக் கொன்றுள்ளமை உறுதியானதையடுத்தே, அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *