Connect with us

உள்நாட்டு செய்தி

அகில இலங்கை தொழிற்சங்க காங்கிரஸ் உதயம்

Published

on

சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசாங்கம் இலங்கை அரசியல் யாப்புக்கு அமைவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழிலாளர் உரிமைகளையும் நலன்களையும் சட்டத்திட்டங்களையும் பாதுகாப்பதற்காக மலையகத்தில் அகில இலங்கை தொழிற்சங்க காங்கிரஸ் என்ற புதிய தொழிற்சங்கம் ஒன்றினை உருவாக்கியுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் அம்மாசி எஸ்.நல்லுசாமி தெரிவித்தார்.

அகில இலங்கை தொழிற்சங்க காங்கிரஸின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று ஹட்டன் சிவ ஸ்ரீ சிவசுப்பிரமணிய தேவஸ்த்தானத்தில் விசேட பூஜைகளை தொடர்ந்து இடம்பெற்றது. அகில இலங்கை தொழிற்சங்க காங்கிரஸின் தலைவராக நேசன் திருநேசனும் பொருளாளராக கந்தசாமி லோகேஸ்வரியும் தெரிவு செய்யப்பட்டதுடன் ஏனைய அங்கத்தவர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

பூஜை வழிபாடுகளின் பின்னர் தொழிற்சங்கம் பற்றி விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்று ஹட்டனில் நடைபெற்றது.

அதில் பொதுச் செயலாளர் அம்மாசி எஸ்.நல்லுசாமி கருத்து தெரிவிக்கையில்…

“இன்று தொழிற்சங்கங்கள் என்பது தொழிலாளர்களின் உரிமையினை பாதுக்காகின்ற ஒரு அமைப்பு ஆனால் தொழிலாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கின்றார்கள் அதற்கு நான் தொழிற்சங்கங்களை குறை கூறவில்லை. நடைமுறையிலே சிக்கல்கள் இருக்கின்றன என்றுதான் கூறுகிறேன். மலையகத்தில் பல தொழிற்சங்கங்கள் இருந்தாலும்கூட அவை அனைத்து தொழிலாளர் உரிமைகள் தொடர்பாக அக்கறை கொள்ளாது தங்களது சுய நலத்திற்காக அரசியல் லாபத்திற்காக கொண்டு செல்லும் நிலையினையே காணுகின்றோம்.

தோட்டத்தொழிலாளர்கள் உரிமைகள் தொடர்பாக எந்த ஒரு தொழிற் சங்கமும் அக்கறை கொள்வதாக தெரியவில்லை. தொழிலாளர்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழில் ரீதியான எத்தனையோ சட்டங்கள் உள்ளன. குறிப்பாக சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் தொழிலாளர்களுக்காக எண்ணற்ற சட்டங்களை இயற்றியுள்ளது. அதிலுள்ள கொள்ளைகள் பிரகடனங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா? என்று கேட்டால் அந்த கேள்வி பதில் கிடையாது.சுகாதாரமும் தொழில் பாதுகாப்பு தொழிலாளர்களுக்கு இருக்கின்றதா? என்று பாரத்தால் மலையகத்தில் அதுவும் கிடையாது.

அதற்கு சிறந்த உதாரணமாக இன்று தொழிலாளர்கள் சிறுத்தை தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.தேன் பூச்சி, குளவி கொட்டுதல்களுக்கு ஆளாகின்றனர். இது போன்று எத்தனையோ துன்பங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். ஆனால் இவை எதற்குமே எந்த தொழில் பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை.அரசாங்கம் 1992 கம்பனிகளுக்கு இந்த தோட்டங்களை ஒப்படைக்கும் போது ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தம் எங்கே அந்த ஒப்பந்தத்தில் கம்பனிகள் என்ன செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. முதலீடுகள் செய்வோம் என்று கூறியிருப்பார்கள் முதலீடுகள் செய்யப்படுகின்றனவா?.நாங்கள் எப்போதும் குறை கூறிக்கொண்டு இதனை செயப்படுத்த விரும்பவில்லை. கம்பனிகளிடம் பேசி அரசாங்கத்தின் சட்டத்திட்டங்களுக்கு அமைவாகவே செயப்படுவோம். இங்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் தொடர்பாக பேசப்பட்டது.

2015 ஆண்டு மே நுவரெலியாவில் வைத்து சொல்லப்பட்டது இன்று இருந்த நாணயமாற்று வீதத்துடன் ஒப்பிடுகையில் 1456 ரூபா பெற்றுக்கொடுத்திருக்க வேண்டும்.எனவே ஆயிரம் ரூபா என்பது வெறும் வெத்து வேட்டு என்று தோன்றுகிறது. ஆகவே இனிவரும் காலங்களிலாவது ஒரு கொள்கை ரிதியாக தொழிற்சங்க செயப்பாடுகளை முன்னெடுக்க எத்தணித்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.