Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கைக்கு கடத்த இருந்த 30 இலட்சம் ரூபா மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்..

Published

on

மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த 30 இலட்சம் ரூபா மதிப்பிலான  கடல் அட்டைகளை நேற்று (05) பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல்படை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினர் கடத்தலில் ஈடுபட்ட ஏழு பேரை தேடி வருகின்றனர்.  

மன்னார் வளைகுடா  கடல் வழியாக இலங்கைக்கு  தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்த இருப்பதாக இந்திய கடலோர காவல் படைக்கு  இரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து தனுஸ்கோடி கடற்கரை பகுதியில் கடலோர காவல் படை மற்றும் தமிழக கடலோர காவல் குழு அதிகாரிகள்  தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது சேரங்கோட்டை கடற்கரை பகுதியில் சந்தேகபடும்படி கிடந்த சாக்கு  மூட்டைகளை சோதனை செய்த போது தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கபட்டிருந்தது தெரிய வந்ததையடுத்து கடலோர காவல் படை அதிகாரிகள் கடல் அட்டைகளை கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட  கடல் அட்டைகளை இந்திய கடலோர காவல் படை மண்டபம் முகாமிற்கு  எடுத்து சென்று எடையிட்ட போது அதில் 450 கிலோ கடல் அட்டைகள் இருந்தது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் ராமேஸ்வரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தீபக் சுப்ரஸ்க்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரை ஓரத்தில் உள்ள தோப்பு ஒன்றில் சோதனை செய்ததில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதப்படுத்தப்பட்ட மற்றும் உயிருடன் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் சாக்கு மூட்டைகளில் இருந்தது தெரிய வந்ததையடுத்து அந்த தோப்பில் இருந்து 952 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு மண்டபம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய வேதாளை மற்றும் மரக்காயர்பட்டிணத்தை சேர்ந்த 7 பேர் மீது வழக்கு பதிவு செய்த மண்டபம் காவல் நிலைய போலீசார் அவர்களை தீவிரமாக  தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் இன்று மாலை வரை இலங்கைக்கு கடத்த இருந்த 30 இலட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.