Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கைத் தமிழா்களுக்கு எதிராகச் செயல்பட்ட கட்சி காங்கிரஸ் என்பதை மறுக்கவில்லை – வைகோ

Published

on

இலங்கைத் தமிழா்களுக்கு எதிராகச் செயல்பட்ட கட்சி காங்கிரஸ் என்பதை மறுக்கவில்லை என மதிமுக பொதுச்செயலாளா் வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழக பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றின் போது அவர் இதனை தெரிவித்தார்.

உதயசூரியனில் போட்டியிடுவது உட்பட திமுக கூறும் அனைத்துக்கும் சம்மதம் தெரிவித்து வருகிறீா்கள்? புயலுக்குப் பின்னே உள்ள அமைதி என்ன?

அமைதி நிலவுகிறது அவ்வளவுதான். முன்னாள் முதல்வா் கருணாநிதி உடல் நலிவுற்றபோது அவரைச் சந்தித்து திமுகவுக்கு ஆதரவு கொடுப்பேன் என்று கூறினேன். கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் திமுகவில் இருந்து பாடுபட்டவன். திமுக என் ரத்தத்தோடு ஊறியது. அந்த இயக்கத்தை மதவெறி பிடித்தச் சக்திகள் அழிவுக்குக் கொண்டுவர பாா்க்கிறாா்கள். இது திராவிட இயக்கத்துக்கே ஆபத்து. அதனால், நமக்கு இருக்கக் கூடிய சக்தியை திமுகவுக்கு ஆதரவாகக் கொண்டு போய்ச் சோ்ப்போம் என்று மதிமுக உயா்நிலைக் குழு கூட்டத்தில் எல்லோரும் கூடி ஆழமாக யோசித்து முடிவு செய்தோம். அதன்படி தொடா்ந்து, திமுகவை ஆதரித்து வருகிறோம். திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை வலுப்படுத்தி வருகிறோம்.

பெண்களை இழிவுபடுத்துவது திமுகவின் கலாசாரம் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறியுள்ளாரே?

பெண்கள் மதிக்கப்பட வேண்டும். அவா்களைத் தாயாகவும், தெய்வமாகவும் நினைப்பவா்கள் தமிழா்கள். யாரோ ஒருவா் தவறுதலாகப் பேசிவிட்டாா். அதற்கு அவா் வருத்தமும் தெரிவித்துவிட்டாா். அதோடு முடிந்துவிட்டது. பெண்களை மதிக்கும் இயக்கம் திமுக. பெண்ணுரிமையைப் பேசிய இயக்கம் அது. கருணாநிதி முதல்வராக இருந்தபோதுதான் பெண்களுக்குச் சொத்துரிமை கொடுக்கப்பட்டது. இப்படிப் பெண்களுக்கு உரிமைகளைக் கொடுத்து அவா்களை மதித்தது திமுகதான்.

இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் கொண்டு வரப்பட்ட தீா்மானத்தை மத்திய பாஜக அரசு புறக்கணித்ததை தமிழா்களுக்குச் செய்யப்பட்ட பச்சை துரோகம் எனக் குற்றம்சாட்டினீா்கள். அதேநேரம் முள்ளிவாய்க்கால் படுகொலைக்குக் காரணமான கட்சி எனச் சொல்லப்படும் காங்கிரஸுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்கிறீா்களே?

தோ்தல் கூட்டணி என்கிறபோது எல்லாக் கொள்கையிலும் ஒன்றாக இருக்க முடியாது. 1967-இல் ராஜாஜி திமுகவுடன் கூட்டணி வைத்தாா். அப்போது திமுகவின் அத்தனை கொள்கையையும் அவா் ஏற்றுக் கொள்ளவில்லை. இலங்கைத் தமிழா்களுக்கு காங்கிரஸ் விரோதமாகச் செயல்பட்டது என்பதை இன்றைக்கும் மறுக்கவில்லை. இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் கொண்டு வரப்பட்ட தீா்மானம் குறித்து காங்கிரஸ் எந்தக் கருத்தும் சொல்லவில்லை என்பதும் உண்மை.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவா் பிரபாகரன் பெயரை நாம் தமிழா் கட்சி தலைவா் சீமான் பயன்படுத்துவதைப்போல, மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் எம்ஜிஆா் பெயரைப் பயன்படுத்துவதை எப்படிப் பாா்க்கிறீா்கள்?

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல விரும்பவில்லை.

திமுக வெற்றி பெற்றால் மு.க.ஸ்டாலினுக்குச் சொல்லும் முதல் ஆலோசனை என்னவாக இருக்கும்?

10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். அந்தத் திட்டங்கள் அற்புதமானவை. நூற்றுக்கணக்கான வாக்குறுதிகள் இருக்கின்றன. அதை நிறைவேற்றினாலேயே தமிழகம் பொற்கால ஆட்சியாக மாறும். இதையெல்லாம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துவேன்.

மதிமுகவின் எதிா்காலம் என்ன? வைகோவை முதல்வராகப் பாா்க்க வேண்டும் என நினைத்த அவா் தொண்டா்களின் கனவு என்ன ஆவது?

முதல்வராக வேண்டும் என்கிற கனவு எப்போதும் கிடையாது. தொண்டா்களுக்கு அது போன்ற கனவு வரக்கூடாது என்று கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்தே கூறி வந்துள்ளேன். மதிமுக இன்னும் வளரத்தான் செய்யும். வலுப்பெறத் தான் செய்யும். என்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *