Connect with us

உள்நாட்டு செய்தி

வடக்கு, கிழக்கு மக்கள் இராணுவ பிடிக்குள் வாழ்கிறார்கள்-நிர்மலநாதன்

Published

on

ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடரில்  இலங்கை அரசுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்களானது இலங்கை வாழ் தமிழ் மக்கள் மீது அரசும் இராணுவமும்  எந்த ஒரு அடக்கு முறைகளையும் பிரயோகிக்காத வகையில் அமைய   வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

அவர் இன்று (26) ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்

“ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடரில்  இலங்கை அரசுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்களானது இலங்கை வாழ் தமிழ் மக்கள் மீது அரசும் இராணுவமும்  எந்த ஒரு அடக்கு முறைகளையும் பிரயோகிக்காத வண்ணம் இருக்க வேண்டும்.

போர்க்குற்றங்கள் தொடர்பான குழு நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு எந்த விதமான தகுதிகளும் இல்லை. கோட்டாபாய ராஜபக்ச அவர்கள்  பாதுகாப்பு செயலாளராக இருந்த போது தான்  போர்க் குற்றங்கள் நிகழ்த்தப்பட்டது.

போர்க் குற்றம் புரிந்தவர்களே போர்க்குற்றத்தை விசாரிப்பதற்கு குழு நியமிப்பது ஒரு கேளிக் கூத்தான விடயம். இந்த குழுவை சர்வதேசமோ ஐ.நா மனித உரிமைப் பேரவையோ எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.

அவர்களும் இதை ஒரு கேளிக்கை விடயமாகவே பார்ப்பார்கள். நாட்டினுடைய ஜனாதிபதி  நாட்டினுடைய ஜனாதிபதியாக இருந்து கொண்டு  சர்வாதிகார போக்கிலான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இருக்கின்றது.

தமிழ் மக்களை இராணுவப்பிடிக்குள் வைத்து தமிழர்களின் நில அபகரிப்பு   மத அடையாளங்கள் அழிப்பு கலாச்சாரங்கள் அழிப்புக்கள் தொர்ந்து கொண்டிருக்கின்றது.

கொரோனா மற்றும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் இவற்றை காரணம் காட்டி இராணுவ சோதனை சாவடிகள் அதிகரிக்கப்பட்டு வடக்கு கிழக்கு இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் தள்ளப்பட்டுள்ளது.

நடைபெற இருக்கும் ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடரின் தீர்மானத்தின் ஊடாக இலங்கை அரசுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்களால் தமிழ் மக்கள் மீதான அரசின் அடக்கு முறை அச்சுறுத்தல்கள் இல்லாமல் செய்யப்பட வேண்டும்.

யுத்த குற்றம் தொடர்பான உண்மை நிலை  என்ன ? என்பது அனைத்து உலத்திற்கும் வெளிப்படையாக தெரிய வேண்டும்.” என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மேலும் தெரிவித்தார்.