Connect with us

உள்நாட்டு செய்தி

நுவரெலியா விடுதி ஒன்றில் கணவன், மனைவி சடலமாக மீட்பு

Published

on

நுவரெலியா விடுதி அறையொன்றில் தங்கியிருந்த கணவன் மனைவி சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

உல்லாசப் பிரயாணிகளாக நுவரெலியாவிற்கு வருகை தந்த ஆண் (59) ஒருவரும் பெண் (58) ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக தெரியவருவதாவது

நேற்றையதினம் (26) கதிர்காமத்திலிருந்து 8 பேர் கொண்ட குடும்ப உறுப்பினர்களுடன் தங்களுடைய விடுமுறையை கழிப்பதற்காக நுவரலியாவிற்கு வருகை தந்து நுவரெலியா கெலேகால பகுதியில் தனியார் விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர்.

இதன்போது இவர்கள் தங்களுடைய இரவு உணவுத் தேவைக்காக பயன்படுத்திய ‘பாபிகியுவ்’  (Barbecue) இயந்திரத்தை குளிரிலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக அறைக்குள் வைத்து நித்திரைக்கு சென்றுள்ளனர்.

இதன்போது குறித்த இயந்திரத்தில் இருந்து வெளியேறிய நச்சு வாயு காரணமாக இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

காலையில் குறித்த இருவரும் எழுந்திருக்காததை அறிந்த மகன் மற்றும் மகள்மார்கள் இருவரும் அறையினுடைய மற்றொரு சாவியை பயன்படுத்தி கதவை திறந்து பார்க்கும் பொழுது, அவர்கள் இருவரும் உயிரிழந்திருப்பதை அவதானித்துள்ளனர்.

பின்னர் விடுதியின் முகாமையாளரின் ஊடாக நுவரெலியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சடலங்களை மீட்டுள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் குருணாகல், கொக்கரல்ல பகுதியில் வசிக்கும் தொழிலதிபரான அஜித் குமார ஹேரத் (வயது 59), அவரின் மனைவியான ஆயுர்வேத தாதி மாலனி நந்தா மொலகொட (வயது 58) என பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களுடைய சடலம் இன்றையதினம் (27) நுவரெலிய மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை இடம் பெற்றதன் பின்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்ட இருப்பதாக நுவரெலியா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.