உள்நாட்டு செய்தி
ஹிசாலினியின் மரணம் தொடர்பில் விசாரணை செய்ய சட்டமா அதிபர் நியமித்த குழு
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமி தொடர்பிலான விசாரணைகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க சட்டமா அதிபரினால் அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினம் இன்று (22) மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்றை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அழைத்து கலந்துரையாடி இருந்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, இதுவரை இடம்பெற்ற விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து சட்டமா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இது தொடர்பிலான நாளாந்த நடவடிக்கைகள் மற்றும் தேவையான ஆலோசனைகளை பெற்றுக் கொடுப்பதற்காக பிரதி சொலிசிட்டர் நாயகம் திலீப பீரிஸ் தலைமையிலான சட்டத்தரணிகள் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹிசாலினி தொடர்பில் நீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என கோரி லிந்துலை லிப்பகலை தோட்ட மக்கள் இன்று (22) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
அத்துடன் மரணத்துடன் சம்மந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டகாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.