Connect with us

உள்நாட்டு செய்தி

நிகழ்காலத்தை சரி செய்ய கடந்த காலம் முக்கியமானது என்கிறார் பிரதமர்

Published

on

கடந்த காலத்தில் காணப்பட்ட ஒற்றுமை உணர்வை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தால் மீண்டும் உலகக் கிண்ணத்தை வெற்றிகொள்ளலாமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்டு இன்றுடன் 25 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது.

இந்த நிலையில் அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற உலகக் கிண்ண வெற்றியின் 25 ஆவது ஆண்டு தேசிய நிகழ்வில் கலந்துகொண்டிருந்த போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகம், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஆகியன இணைந்து இந்த தேசிய நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

அன்றைய தினம் அரங்கில் விளையாடியவர்கள் சாதாரண கிரிக்கெட் வீரர்கள் அல்ல , அவர்கள் நாட்டை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற உணர்வு கொண்ட இளைஞர்கள் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

இலங்கையில் அக்காலப்பகுதியில் காணப்பட்ட பயங்கரவாதம் கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்களினால் அவுஸ்திரேலியா தென்னாபிரிக்கா மேற்கிந்திய தீவுகள் இங்கிலாந்து ஆகிய நாடுகள் இலங்கையில் நடைபெறும் உலகக்கிண்ண போட்டியில் விளையாட முடியாது எனக் கூறியமையை பிரதமர் இதன்போது நினைவுகூர்ந்தார்.

எவ்வாறாயினும் அத்தகைய சந்தர்ப்பத்தில் இந்தியா பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகள் இலங்கைக்கு சகோதரத்துவத்தின் கரங்களை நீட்டியதுடன் அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்து கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டு ஊக்கமளித்ததாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டினார்.


1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்ட சந்தர்ப்பத்தில் சர்வதேச கிரிக்கெட் சபை கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கிய பதக்கங்கள் இவ்வளவு காலமாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் காணப்பட்ட நிலையில் அப்பதக்கங்கள் பிரதமரின் கரங்களினால் கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.