Connect with us

உள்நாட்டு செய்தி

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தட்டுப்பாடின்றி வழங்கப்படும் !

Published

on

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் அத்தியாவசிய உணவுப் பொருட்களை நியாயமான விலையில் தட்டுப்பாடு இன்றி பெற்றுக் கொள்ளக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

விவசாய அமைச்சின் ஊடாக நெல் கொள்வனவு செய்வதற்கான சூழல் தற்போது தயாராகியுள்ளது. நுகர்வோரையும் உற்பத்தியாளரையும் பாதுகாத்து முன்னோக்கிச் செல்ல ஒரு முறைமை தயாராகி வருகிறது. அண்மைய காலமாக காய்கறிகள், பழங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. விவசாய அமைச்சு என்ற வகையில், காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி, சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலையை பழைய நிலைக்கு கொண்டுவர முடிந்தது.

அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பத்தை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தி பயிர் சேதத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மக்களின் புரதத் தேவைக்காக இறைச்சி மற்றும் முட்டைகளை உற்பத்தி செய்து நாட்டை தன்னிறைவு அடையச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டத்தை விவசாய அமைச்சு நடைமுறைப்படுத்தியுள்ளது. கால்நடை உற்பத்தியை அதிகரிக்க சுகாதார திணைக்களம் மற்றும் 09 மாகாண சபைகள் இணைந்து கால்நடை வளர்ப்பின் தரத்தை உயர்த்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

மேலும், பிரான்ஸ் நாட்டின் உதவியுடன் திரவ பால் உற்பத்தியை அதிகரிக்க 06 தொழிற்சாலைகளைத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் இதுவரை 03 தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் அத்தியாவசியப் பொருட்களைத் தட்டுப்பாடு இன்றி நியாயமான விலையில் பெற்றுக் கொள்ளும் சூழலை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் விவசாயக் கொள்கை மூலம் நுகர்வுக்கு தேவையான அரிசியை உற்பத்தி செய்யக்கூடியதாக உள்ளது எனவும் தெரிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *