Connect with us

அரசியல்

நாட்டை 18 மாதங்களில் மீட்டுள்ளேன் – ஜனாதிபதி

Published

on

அனைத்து துறைகளையும் நவீனமயப்படுத்தி நாட்டை முன்னேற்ற பாதைக்கு இட்டுச் செல்லும் புதிய பொருளாதார0 வேலைத்திட்டம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

பழைய முறைகளை தொடர்வதன் ஊடாக நாட்டிற்கு எதிர்காலம் கிடையாது எனவும், கடந்த சில வருடங்களில் ஒரு தேசம் என்ற வகையில் நாம் எதிர்கொண்ட கசப்பான அனுபவத்தை எதிர்கால சந்ததியினர் வரை கொண்டு செல்ல முடியாது எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

எனவே, புதிய பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கு அனைவரும் இணைந்து கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்தார்.

அரசாங்க மதிப்பீட்டு திணைக்களத்தின் நூற்றாண்டு விழாவில் இன்று கலந்து கொண்ட ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

18 மாதங்களில் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதற்கு அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஊழியர் சமூகம் மேற்கொண்டுள்ள பணிகளை பாராட்டிய ஜனாதிபதி, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை சரியான முறையில் நிர்வகிக்காவிட்டால் மீண்டும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிடும் எனவும் சுட்டிக்காட்டினார்.

தற்போது நிலையான பொருளாதாரத்தை டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு கொண்டு செல்ல புதிய திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் எனவும் அதில் நவீன பொருளாதார முறைகளை பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

உலகப் பொருளாதார வீழ்ச்சியின் பின்னணியில் வங்குரோத்து நிலையை அடைந்த நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை விரைவாக மீண்டு வர முடிந்துள்ளதாக உலக நிதி நிறுவனங்கள் கூட ஒப்புக்கொள்கின்றன என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

மதிப்பீட்டுத் துறை செயல்முறை போர்த்துகேயரின் காலனித்துவக் காலத்திற்கு முந்தையது. பிரிட்டிஷ் காலத்தில், கணக்கெடுப்பு மற்றும் மதிப்பீடு செயல்முறை முன்னோக்கி கொண்டு வரப்பட்டது. 1923 இல், மதிப்பீட்டாளர் பதவி உருவாக்கப்பட்டது.

1972 இல் அறிமுகப்படுத்தப்பட்ட நிலக் கொள்கையின் மூலம் மதிப்பீட்டுத் திணைக்களத்தின் பங்கு மேலும் விரிவாக்கப்பட்டது. அதன்படி, மதிப்பீட்டுத் திணைக்களம் தற்போது புதிய யுகத்தில் நுழைந்துள்ளது. அங்கு டிஜிட்டல் மயமாக்கல் மிகவும் முக்கியமானது. டிஜிட்டல் பொருளாதாரத்தில் மதிப்பீடுகளுக்கு மனிதவளம் தேவைப்படுகிறது. அதற்காக மதிப்பீட்டாளர்களை உருவாக்கும் வகையில் பல்கலைக்கழகங்களில் மாணவர்களை உள்வாங்குவதை அதிகரிக்க வேண்டும்.

மேலும், எதிர்காலத்தில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை சொத்து மதிப்பீடு செய்யப்பட வேண்டும். வரி வசூலிக்கும் முறைக்கு மதிப்பீட்டின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. எனவே, இந்த ஆண்டு முதல் மதிப்பீட்டு செயல்முறை டிஜிட்டல் மயமாக்கப்படுவதை வரவேற்கிறேன்.

கடந்த ஆண்டு நாம் நாடென்ற வகையில் பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டோம். அந்த நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதில் அரச அதிகாரிகளும்,முழு நாட்டு மக்களும் பெரும் தியாகங்களைச் செய்தனர். அதற்காக நாம் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

இம்மாத நடுப்பகுதியில், நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவிக்க உள்ளது. ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த புதிய பொருளாதார முறைகளின்படி முன்னேற வேண்டும். அப்படி இல்லாமல், பழைய பொருளாதார முறைகளை அமுல்படுத்தினால், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதை தடுக்க முடியாது.

மத்திய வங்கி ஏற்கனவே பணம் அச்சிடுவதை நிறுத்திவிட்டது. அத்துடன் அபிவிருத்திக்காக அரச வங்கிகளில் இருந்து கடன் பெறுவதும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிபந்தனைகள் இல்லாமல் பொருளாதார முன்னேற்த்தை எட்ட முடியாது. நாட்டுக்கு நிதி ஒழுக்கம் தேவை. பொருளாதாரத்தை நிதி ஒழுக்கத்துடன் நிர்வகித்தால், எதிர்காலத்தில் மக்களுக்கு அதிக நிவாரணங்களை வழங்க முடியும்.

இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இடையிலான இடைவெளி மற்றும் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை இந்த நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஏற்றுமதி வருவாயை அதிகரிக்கவும், அரசின் செலவினங்களை குறைக்கவும், அரசின் வருவாயை அதிகரிக்கவும் புதிய திட்டங்களை தயாரித்துள்ளோம்.

சுற்றுலாத் துறையின் மூலம் அதிக அந்நியச் செலாவணியை ஈட்ட முடியும். அடுத்த ஆண்டு 25 இலட்சம் சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளோம். சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 50 இலட்சமாக உயர்த்தினால் இந்நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்கு விரைவான தீர்வுகளைப் பெற முடியும் என நம்புகின்றோம்.
இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 3 இலட்சம் ஏக்கர் நிலத்தை மக்களுக்கு பயிர்ச்செய்கைக்காக வழங்க முன்மொழியப்பட்டுள்ளது. அந்த இலக்கை அடைவதில் மதிப்பீட்டுத் துறைக்கு பெரும் பங்கு உள்ளது. மதிப்பீட்டுத் திணைக்களம் டிஜிட்டல் மயமாக்கல் பணியை சிறப்பாகச் செய்யும்.

எரிசக்தி துறையிலும் புதிய அணுகுமுறைகள் அவசியம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். காற்றாலை மூலம் 35 கிகாவோர்ட்டும், சூரிய சக்தி மூலம் 200 கிகாவோர்ட்டும் மின் உற்பத்தி செய்ய முடியும். இந்த நாட்டில் நுகர்வுக்கு 50 கிகாவோர்ட்டினை விட குறைவாகவே மின்சாரம் தேவைப்படுகிறது. எனவே, எரிசக்தி துறையின் ஊடாகவும் அதிக அந்நியச் செலாவணியை ஈட்ட முடியும். செயற்கை நுண்ணறிவு குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட்டு, டிஜிட்டல் பொருளாதாரத்தில் அதைப் பயன்படுத்துவதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டும்.

மிகக் குறுகிய காலத்தில் நாட்டில் வலுவான பொருளாதாரத்தை உருவாக்க முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.