Connect with us

உள்நாட்டு செய்தி

அவசர கால நிலைமை பிரகடனம் குறித்த விவாதம் மு.ப 10.00 முதல்

Published

on

பாராளுமன்றம் இனறு மு.ப 10.00 மணிக்குக் கூடவிருப்பதுடன், பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதில் ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலைமை அறிவிப்பு பி.ப 4.30 மணி வரை விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளது.

2022 ஜூலை 17 ஆம் திகதிய 2288/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அப்போதைய பதில் ஜனாதிபதியினால் இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்டதுடன், சட்ட விதிகளுக்கு அமைய அவசரகால நிலைமைப் பிரகடனம் 14 நாட்களுக்குள் பாராளுமன்றத்தின் அனுமதி பெறப்படாவிட்டால் இது இரத்தாகிவிடும்.

இலங்கையில் மக்கள் அவசரகால நிலைமை நிலவுவதன் காரணமாக பொது மக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியைப் பாதுகாத்தல், பொதுமக்கள் வாழ்வுக்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகள் என்பவற்றைப் பேணுவதற்குப் பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்டிருப்பதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதால் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் பெயரிடப்பட்டுள்ள வஜிர அபேர்தன இன்று பாராளுமன்ற உறுப்பினராகப் பதவிச்சத்தியம் செய்யவுள்ளார்.