உள்நாட்டு செய்தி
7 இந்திய மீனவர்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் விடுவிப்பு
![](https://tm.lkpost.lk/wp-content/uploads/2021/10/pre-judge.jpg)
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த மேலும் 7 இந்திய மீனவர்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.தலைமன்னார் கடற்பரப்பில் கடந்த 20 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இந்த 7 மீனவர்களும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.இதன்போது, குறித்த 7 மீனவர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்து மேலதிக நீதவான் லதீப் ரதீப் விடுவித்தார்.முதலாவது படகில் கைது செய்யப்பட்ட மூவருக்கும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் கீழ் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இரண்டாவது படகில் கைது செய்யப்பட்ட நான்கு மீனவர்களுக்கும் மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ், முதலாவது குற்றச்சாட்டிற்கு ஒரு வருடமும், இரண்டாவது குற்றச்சாட்டிற்கு 6 மாதங்களும், மூன்றாவது குற்றச்சாட்டிற்கு 5 மாதங்களும் என 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 23 மாத சிறைத்தண்டனை விதித்து மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.இரண்டு படகுகளின் உரிமையாளர்களை முதலாவது குற்றவாளியாக குற்றஞ்சுமத்தி, கடற்றொழில் திணைக்களத்தினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதனடிப்படையில், படகு உரிமையாளர்களை எதிர்வரும் ஜூலை 11 ஆம் திகதி மன்றில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.விடுவிக்கப்பட்ட மீனவர்களை மிரிஹான இடைத்தங்கல் முகாமிற்கு அனுப்பி அங்கிருந்து இந்தியாவிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உயர்ஸ்தானிகராலயத்திற்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.