Connect with us

உள்நாட்டு செய்தி

அனைத்து மக்களும் அமைதியானதும் நேர்மையானதுமான எண்ணங்களுடன் சிங்கள, தமிழ் புத்தாண்டை கொண்டாட வேண்டும் – ஜனாதிபதி

Published

on

புதிய எதிர்பார்ப்புகளுடனும் அவற்றை அடைந்துகொள்வதற்கான உறுதியுடனும் சிங்கள, தமிழ் புத்தாண்டை வரவேற்பது எமது கலாசாரத்தில் ஒரு மதிப்புமிக்க பாரம்பரியமாகும் என ஜனாதிபதி தனது புதுவருட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வெளியிட்டுள்ள புதுவருட வாழ்த்துச் செய்தி

“கடந்த வருடம் புத்தாண்டு பிறப்பின் போது நாட்டில் நிலவிய சீரற்ற சுகாதார நிலைமைகள் அதற்குத் தடையாக இருந்தபோதிலும், பண்டைய பாரம்பரியங்கள் மற்றும் மரபுகளுக்கு முன்னுரிமை அளித்து, சுகாதார ஆலோசனைகளுக்கு ஏற்ப புத்தாண்டை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கக்கூடிய வகையில் இந்த ஆண்டின் பின்னணியை நாம் அனைவரும் சேர்ந்து அமைத்திருக்கின்றோம்.

அது புத்தாண்டின் விடியலை ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கும் சிறு பிள்ளைகளைப் போலவே, அனைத்து குடிமக்களினதும் எதிர்பார்ப்பு நிறைவேறியிருப்பதை காட்டுகிறது.

சிங்கள, தமிழ் புத்தாண்டு எங்களது மிகப்பெரும் கலாசார விழாவாகும். நாட்டு மக்கள் ஒரே சுபநேரத்தில் புத்தாண்டு கிரியைகளை நிறைவேற்றுவதன் மூலம் பிறக்கும் புத்தாண்டில் சுபீட்சம் மலரும் என்று எங்கள் உள்ளங்களில் ஒரு வலுவான நம்பிக்கை ஆழப் பதிந்துள்ளது.

சிறுவர்களை மகிழ்விக்கும் புத்தாண்டு ஆடைகள், உணவுகள் மற்றும் விளையாட்டுகளை பார்த்து பெரியவர்கள் அளவில்லா ஆனந்தம் அடைகின்றனர். மேலும், சூழலில் ஏற்படும் இனிமையான மாற்றங்கள் எமக்கு உடல் மற்றும் உள ஆறுதலைத் தருகின்றன.

சிக்கலான எண்ணங்களுடன் வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுபடும் வளர்ந்தவர்கள் அவர்களுக்கிடையே ஏற்படும் கவலைதரும் மனக்குறைகளை தேற்றிக்கொள்ள கிடைப்பதும் புத்தாண்டின் ஒரு விசேட சிறப்பம்சமாகும்.

அனைத்து மக்களும் எந்தவிதமான பேதங்களும் இன்றி அமைதியானதும் நேர்மையானதுமான எண்ணங்களுடன் சிங்கள, தமிழ் புத்தாண்டு சம்பிரதாயங்களில் இணைந்துகொள்ள வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகும்.

புத்தாண்டு காலத்தில் தங்களது பிள்ளைகளை பிரிந்து கடமைகளில் ஈடுபட்டுள்ள மற்றும் வெளிநாடுகளில் உள்ள அனைவரினதும் அர்ப்பணிப்புகளை நான் இச்சந்தர்ப்பத்தில் கௌரவத்துடன் நினைவுகூர்கிறேன்.

மலரும் சிங்கள, தமிழ் புத்தாண்டு அனைவருக்கும் சுபீட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்த இனிய புத்தாண்டாக அமைய வாழ்த்துக்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது புதுவருட வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

இதேவேளை பிரதமர் வெளியிட்டுள்ள புதுவருட வாழ்த்துச் செய்தி
‘அனைத்து இலங்கையர்களினதும் புதிய எதிர்பார்ப்புகள் நிறைவேறும் தமிழ் சிங்கள புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு இந்த வாழ்த்து செய்தியை மிகுந்த மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறேன்.

நம் நாட்டு மக்கள் பழங்காலத்திலிருந்தே பழங்கால பழக்கவழக்கங்களுக்கும் மரபுகளுக்கும் முன்னுரிமை அளித்து, விழாக்களை கொண்டாடி வருகின்றனர்.

விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களுடன் பின்னிப் பிணைந்திருக்கும் கலாசார ரீதியாக மதிப்புமிக்க சமூக நடைமுறைகள் இந்த தமிழ் சிங்கள புத்தாண்டின் மூலம் நினைவு கூரப்படுகின்றது.

அரசாங்கம் வழங்கிய சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி ஒழுக்கமான மக்கள் என்ற வகையில் நீங்கள் செய்த அர்ப்பணிப்புகள் காரணமாக, இப்புத்தாண்டை இந்த அளவிற்கேனும் சுதந்திரமாக கொண்டாட வாய்ப்பு கிடைத்துள்ளது.

எனவே, சுகாதார நடைமுறைகளை மனதில் கொண்டு நமது கலாசார விழுமியங்களைப் பாதுகாப்பது நம் அனைவரினதும் பொறுப்பாகும்.

மக்கள் மீது சுமத்தப்படும் சுமையை அரசாங்கம் பொறுப்பேற்று, அனைத்து மக்களின் எதிர்காலத்தையும் வளமாக்க அரசாங்கம் செயல்படுகின்றது என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.

புதிய சிந்தனைகள் மற்றும் அபிலாசைகளுடன் நாம் எதிர்கொள்ளும் சவால்களை கவனத்திற்கொண்டு, ஒரு வளமான நாட்டை நோக்கிய ஒரு புதிய பாதையில் பயணிக்க வேண்டிய நேரம் எழுந்துள்ளது.

அதற்கு நம் ஒருவருக்கொருவர் இடையில் காணப்படும் உறவை வலுப்படுத்தி, இலங்கை தேசம் என்ற ரீதியில் உலகின் முன்னிலையில் புதிய வீரியத்துடன் உயர்ந்து நிற்பதற்கு இப்புத்தாண்டில் நாம் அனைவரும் உறுதி கொள்வோம்.

இப்புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் சுபீட்சம் நிறைந்த வளமான ஆண்டாக அமைய வேண்டும் என நான் பிரார்த்திக்கின்றேன்” என பிரதமர் தெரிவித்துள்ளார்.