Connect with us

உள்நாட்டு செய்தி

பௌத்த பிக்குகளுக்கு இடையே மோதல் : ஐவர் காயம் – ஒருவர் கைது

Published

on

அநுராதபுரம் – கெப்பித்திகொல்லாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பௌத்த பிக்கு உள்ளிட்ட  இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

மோதல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கெப்பித்திகொல்லாவ –  குறுலுகம கிராமத்தில் பாம்பு கடிக்கு உள்ளான நிலையில் உயிரிழந்தவரின் வீட்டுக்கு ஏழாம் தினமான நேற்றைய தினம் (28) வாகல்கட பிரதேசத்தில் இருந்து பௌத்தப்பிக்கு ஒருவர் குறித்த வீட்டுக்கு வருகை தந்துள்ளார்.

இந்நிலையில் அதே கிராமத்தில் வசித்து வரும் விகாரையின் விகாராதிபதி மற்றும் கிராம மக்கள் சிலர் குறித்த பௌத்த பிக்குவின் வருகைக்கு எதிர்ப்பினை வெளியிட்டு பிரித் ஓதும் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.இதனை தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் பிரச்சினையை ஏற்படுத்திய  பௌத்த பிக்குவை திருப்பி அனுப்பி வைக்க முற்பட்டுள்ளனர். 

இதன்போது பொலிஸாரை  பௌத்த பிக்கு தாக்கியத்துடன் கடமைக்கும் இடையூறு விளைவித்துள்ளார்.இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறுலுகம ரஜமஹா விகாரையின் விகாரதிபதியான (30வயது) ரஞ்சுனலாகே சுகதவன்ச ஹிமியை கைது செய்துள்ளனர்.

இதேவேளை குறித்த சம்பவத்தில் இரண்டு பொலிசார் உட்பட பௌத்த பிக்கு ஒருவரும் காயம் அடைந்த நிலையில் கெப்பித்திக்கொல்லாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவருகின்றது.சம்பவம் தொடர்பில் கெப்பத்திகொல்லாவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *