Connect with us

உள்நாட்டு செய்தி

இந்திய அரசாங்கத்தின் நிதி பங்களிப்புடன் மலையகபெருந்தோட்டப்பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட 1235 வீடுகள்

Published

on

இந்திய அரசாங்கத்தின் நிதி பங்களிப்புடன் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட ஆயிரத்து 235 வீடுகள் இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.

கொவிட் – 19 தொற்று நிலைமையால் சூம் தொழில்நுட்பம் ஊடாகவே இதற்கான நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்படி பிரதான நிகழ்வு பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வழிகாட்டலின் கீழ், இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்றது.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட அமைச்சர்களும், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் இந்திய தூதுரக அதிகாரிகள் உள்ளிட்டோர் பிரதான நிகழ்வில் பங்கேற்றனர்.

இதன்போது இந்தியாவால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் பற்றி காணொளி ஒளிபரப்பட்டது. பிரமுகர்களின் உரைகளைத்தொடர்ந்து சூம் தொழில்நுட்பம் ஊடாக திறப்பு விழா இடம்பெற்றது.

இதன்பிரகாரம் காலி மாவட்டத்தில் 50 வீடுகளும், பதுளை மாவட்டத்தில் 479 வீடுகளும், கண்டி மாவட்டத்தில் 184 வீடுகளும், அட்டன் மற்றும் பொகவந்தலாவ ஆகிய பகுதிகளில் 155 வீடுகளும், நுவரெலியா, அக்கரபத்தனை பகுதியில் 267 வீடுகளும் இவ்வாறு திறந்துவைக்கப்பட்டன.

மேற்படி பகுதிகளில் இருந்த இ.தொ.கா. பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் ஊடாக வீடுகளுக்குரிய ஆவணங்கள், பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

அதேவேளை, இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் புஸல்லாவை சரஸ்வதி கல்லூரியில் அமைக்கப்பட்ட கட்டடமும் திறந்து வைக்கப்பட்டது.