உள்நாட்டு செய்தி
வத்தலை வர்த்தகர் கொலை வழக்கில் ஒருவர் கைது

வத்தளை பகுதியில் உள்ள வீடொன்றில் உயிரிழந்த நிலையில் வர்த்தகர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 22 வயதுடைய இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வத்தளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட விசாரணை அதிகாரிகள் சந்தேகத்துக்கிடமான வீட்டை சோதனையிட்டுள்ளனர். இதன்போது குறித்த வீட்டின் உரிமையாளர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
56 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் அவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
இந்த சம்பவம் தொடர்பில் சிசிரிவி கேமராக்களின் உதவியுடன் மேற்கொண்ட விசாரணையில் போது இதனுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முச்சக்கர வண்டியின் சாரதி ஒருவர் தொடர்பான விடயங்கள் வெளிக்கொணரப்பட்டிருந்தன. குறித்த சாரதியிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது லஹிரு எனும் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டதுடன் அவரை கைது செய்ய வத்தளை பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே சம்பவத்தின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த வர்த்தகருக்கு சந்தேகநபருக்கு இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இக்கொலை தொடர்பாக மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.