Connect with us

உள்நாட்டு செய்தி

எலிக்காச்சலால் 99 பேர் பாதிப்பு; 6,000 பேருக்குத் தடுப்பு மருந்துகள்!

Published

on

யாழ். மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

எலிக்காய்ச்சல் பரவல் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

எலிக்காச்சலால் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 23 பேரும் யாழ். போதனா வைத்தியசாலையில் 6 பேரும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 9 நோயாளர்களும் யாழ். போதனா வைத்தியசாலையில் 5 நோயாளர்களும் எலிக்காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் இந்நோய் காரணமாக எந்தவொரு இறப்பும் ஏற்படவில்லை. இதுவரை யாழ். மாவட்டத்தில் இந்நோய் காரணமாக 7 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன. எலிக்காய்ச்சல் நோய் வராமல் தடுப்பதற்காகத் தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இதுவரை ஏறத்தாழ சுமார் 6,000 பேருக்குத் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் காய்ச்சல் நோயாளர்களை இனங்காண்பதற்காக சுகாதாரப் பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பாதிக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள கால்நடைகளில் இக்கிருமித்தொற்று உள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காக கொழும்பிலிருந்து கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்திலிருந்து குழு ஒன்று யாழ். மாவட்டத்திற்கு நாளை (18) வருகை தரவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *