Connect with us

முக்கிய செய்தி

இளைஞர்களின் பங்களிப்பை பரந்தளவில் பெற நடவடிக்கை…!

Published

on

  • 75,000 ஆக இருந்த சாரணர்களின் எண்ணிக்கை 150,000 வரை அதிகரிக்க அரசாங்கத்தின் ஆதரவு.
  • சாரணர் இயக்கத்திற்கு புதிய கட்டிடம் – 2000 இளம் பெண் சாரணர் இயக்க உறுப்பினர்களுக்கு ‘ஜனாதிபதி பதக்கம்’ வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு.

சாரணர் இயக்கம், கெடட் படைப் பிரிவு, இளைஞர் படையணி உள்ளிட்ட இளைஞர் அமைப்புகளை சகல வழிகளிலும் பலப்படுத்தி நாட்டின் முன்னேற்றத்திற்கு இளைஞர்களின் பரந்த பங்களிப்பைப் பெறுவதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை அரசாங்கம் ஏற்கனவே ஒதுக்கியுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி நாட்டின் எதிர்கால பயணத்திற்கு பரந்த பங்களிப்பைப் பெறுவது தனது நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (31) இடம்பெற்ற இலங்கை பெண் சாரணர் இயக்க உறுப்பினர்களுக்கு ‘ஜனாதிபதி பதக்கம் ‘ வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

சாரணர் இயக்க அங்கத்தவர் தொகையை 75,000 இல் இருந்து 150,000 வரை அதிகரிக்கத் தேவையான ஆதரவை வழங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சாரணர் இயக்கம், கெடெட் படை, இளைஞர் படையணி உள்ளிட்ட இளைஞர் அமைப்புக்கள் ஊடாகவும் போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டத்திற்கு பெருமளவில் பங்களிக்க முடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

2000 இளம் பெண் சாரணர்களுக்கு ஜனாதிபதி பதக்கம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது.

இலங்கை சாரணர் இயக்கத்தின் தலைவி சாந்தி வில்சன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு விசேட நினைவுப் பரிசொன்றை வழங்கினார்.

மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

”சாரணர் இயக்கம் தொடர்பில் எனக்கு நல்ல புரிதல் உள்ளது. எனது குடும்பத்தைச் சேர்ந்த பலர் இந்த அமைப்பில் இணைந்து செயல்பட்டுள்ளனர். சாரணர் இயக்கத்தை மேலும் முன்னேற்ற வேண்டும். சாரணர் இயக்கத்திற்குத் தேவையான கட்டடமொன்றை வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். சாரணர் இயக்கம், கெடெட் படைப்பிரிவு மற்றும் இளைஞர் படையணி என்பவற்றுக்குத் தேவையான நிதியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. ஏனைய அமைப்புகளின் செயற்பாட்டிற்கும் அரசாங்கத்தினால் ஒரு தொகை நிதியை வழங்க எதிர்பார்க்கிறோம்.

நான் இந்த நாட்டைப் பொறுப்பேற்ற போது திறைசேரியில் பணமிருக்கவில்லை. ஆனால் தற்பொழுது அரசாங்கத்திடம் நிதி இருப்பதால் இவ்வாறு பணம் ஒதுக்க முடிந்துள்ளது. நாம் இப்போது கடினமான காலங்களை கடந்துவிட்டோம். நஷ்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்களுக்கு பணம் கொடுப்பதை இப்போது நிறுத்திவிட்டோம். மேலும், வெளிநாட்டு கடன்களும் நிறுத்தப்பட்டுள்ளன. நாம் செலுத்த வேண்டிய கடன் தொகையும் குறைந்துள்ளது. எனவே இப்போது அரசிடம் ஓரளவு பணம் உள்ளது. அந்த பணத்தை இளைஞர்களுக்காக பயன்படுத்த எதிர்பார்கிறேன்.

தற்போது கல்விக்கான விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அடுத்த சில வருடங்களில் அதற்கு அதிக நிதி செலவிட நேரிடும். சுகாதாரத் துறைக்கும் தேவையான நிதியை ஒதுக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

கல்வித்துறையை புத்தகங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்த முடியாது. பிள்ளைகள் முன்னேற புதிய வாய்ப்புகளைக் கண்டுபிடிக்க வேண்டும். எதிர்காலத்தில் அதற்கான பணத்தை செலவிடுவோம். சாரணர் இயக்கத்தை அனைத்து பிரிவுகளிலும் முன்னேற்ற எதிர்பார்க்கிறோம். 75,000 உறுப்பினர்களாக உள்ள அங்கத்தவர் தொகை எதிர்காலத்தில் 150,000 ஆக அதிகரிக்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான ஆதரவை அரசாங்கம் வழங்க எதிர்பார்க்கிறது.

இந்த அமைப்பின் மூலம் நாம் பெரிய அளவில் சாதிக்க முடியும். போதைப்பொருள் ஒழிப்புக் குழுவுடன் கலந்துரையாடிய போது, ​​பாடசாலைகளில் சாரணர் அமைப்புக்கள் மற்றும் கெடெட் படைகள் ஆகியவற்றை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். போதைப்பொருள் எதிர்ப்புத் திட்டத்தில் இது பெரும் பங்களிப்பைச் செய்ய முடியும்.

மேலும், மாவட்ட அளவிலும், தேசிய அளவிலும் சாரணர் முகாம்களை நிறுவுவதற்கு குறிப்பிட்ட காலத்திற்கு அரசாங்கத்தினால் உதவிகளை வழங்க முடியும். அந்த வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி அமைச்சுடன் இணைந்து செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர, இலங்கை சாரணர் இயக்கத்தின் ஆணையாளர் ஜனப்ரித் பெர்னாண்டோ உள்ளிட்ட சாரணர் இயக்கத்தை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.