Connect with us

முக்கிய செய்தி

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்கள் மீண்டும் மீறப்பட்டால்நாடு பின்னடையும்!

Published

on

  • அந்த ஒப்பந்தங்களை சட்டப்பூர்வமாக்க உத்தேச பொருளாதார பரிமாற்ற சட்டமூலத்திற்கு ஆதரவளிப்பது அனைவரின் பொறுப்பாகும்
  • வீணாக பேசிக்கொண்டிருக்காமல், நாட்டின் பொருளாதாரம் பற்றிய புரிதலுடன்
    பேசுவது எதிர்க்கட்சிகளின் பொறுப்பு
  • சவால்களை ஏற்காமல் சம்பிரதாய அரசியலில் ஈடுபட்டதால் தான் எதிர்க்கட்சி தொடர்ந்தும் எதிர்க்கட்சியாக உள்ளது
  • அச்சமின்றி, சவால்களை ஏற்றுக்கொண்ட அரசாங்கம் இன்று அதன் பெறுபேறுகளைக் காட்டியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்கள் மீறப்படுமானால் நாடு பின்னோக்கிச் செல்லும். எனவே அந்த உடன்படிக்கைகள் அனைத்தையும் அமுல்படுத்த, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பொருளாதார பரிமாற்ற சட்டமூலத்திற்கு ஆதரவளிக்க வேண்டியது அனைவரினதும் பொறுப்பு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கைகளின் பிரகாரம் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமாக பேணுவதற்கு பல பொருளாதார இலக்குகளைப் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளதாகவும், அந்த இலக்குகளை மீறுவது நாட்டின் பொருளாதாரத்தை அழிவுப் பாதையில் இட்டுச் செல்லும் எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

அரசியல் இலாபத்திற்காக மேடைகளில் வீணாகப் பேசிக் கொண்டிருக்காமல் நடைமுறையில் இருக்கும் கட்டமைப்பிற்குள் மாத்திரம் பேசுவது எதிரணியின் பொறுப்பு எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டிற்கான பொறுப்புகளை ஏற்காமல், சம்பிரதாய அரசியலில் ஈடுபட்டதால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்தும் எதிர்க்கட்சியில் இருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இந்த சவாலை அச்சமின்றி ஏற்றுக்கொண்டதால் , அரசாங்கம் அதன் வெற்றிகரமான முடிவுகளை இன்று வெளிப்படுத்தியுள்ளதாகவும், எனவே நாட்டு நலனுக்காக அனைவரையும் ஒரே பாதையில் பயணிக்க அழைப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான “உறுமய” முழுமையான காணி உறுதிப் பத்திரம் வழங்கல் மற்றும் அரிசி மானியம் வழங்கும் நிகழ்வு கரவனெல்ல ஸ்ரீ விசுத்தாராமவில் இன்று (04) நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

“உறுமய” நிரந்த காணி உறுதிப் பத்திரம் வழங்கும் தேசிய வேலைத் திட்டத்தின் ஒரு கட்டமாக கேகாலை மாவட்டத்தில் 350 காணி உறுதிப் பத்திரங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கினார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 20 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக 800 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

”உறுமய காணி உறுதிப் பத்திரத்தின் ஊடாக உங்கள் உரிமை உங்களுக்கு வழங்கப்படுவதாக நான் கருதுகிறேன். இந்த உரிமையை மக்களுக்கு வழங்க முந்தைய அனைத்து அரசுகளும் தவறிவிட்டன. அதற்கான முறையான கட்டமைப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆனால் வெள்ளையர் எந்த சட்டத்தின் மூலம் நிலத்தை கையகப்படுத்தினார்களோ அந்தச் சட்டத்தின்படியே நாட்டு மக்களுக்கு நில உரிமைகளை வழங்கியுள்ளோம். இந்த நிலத்தைப் பாதுகாப்பது உங்கள் பொறுப்பாகும்.

இந்த அரசாங்கம் சாதாரண அரசாங்கம் அல்ல. இது ஒரு கட்சியால் உருவாக்கப்பட்ட அரசாங்கமுமல்ல. இந்த அரசாங்கத்தில் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் உள்ளனர். ஆனால் அரசாங்கம் என்ற வகையில் இன்று நாம் ஒரு பெரிய பொறுப்பை ஏற்றுள்ளோம். அந்தப் பொறுப்பை ஏற்க மறுத்த குழுதான் எதிர்க்கட்சி. அதுதான் எமக்கிடையிலுள்ள வித்தியாசம். அன்று நாட்டில் நிலவிய நிலைமையை நான் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் இன்று இந்த நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு வந்துள்ளோம். அந்த நெருக்கடியில் இருந்து மீண்டுவர 4-5 வருடங்கள் பிடிக்கும் என்று பலர் நினைத்தனர். ஆனால் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் இரண்டே ஆண்டுகளில் மீண்டு வர முடிந்தது.

இன்று, நாட்டில் சுற்றுலாத்துறை முன்னேற்றமடைந்துள்ளது. தற்போது நாட்டிலுள்ள வறுமையை குறைப்பதில் கவனம் செலுத்தியுள்ளோம். அதற்காக விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். கிராமப் பொருளாதாரத்தை உயர்த்தாமல் வறுமையை ஒழிக்க முடியாது.

மேலும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான இலக்குகள் குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தங்களை எட்டியுள்ளோம். 2027ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5% ஆக உயர வேண்டும். எதிர்காலத்தில் இது 8 சதவீதமாக அதிகரிக்கப்பட வேண்டும். 2025இற்குள் வேலையின்மை 5% ஆகக் குறைக்கப்பட வேண்டும். மேலும், வறுமையை 2027இல் 25%-15% ஆகவும், 2035இற்குள் 10% ஆகவும் குறைக்க இலக்கு வைத்துள்ளோம்.

இந்தப் பணியை முன்னெடுப்பதாக நாம் அறிவித்த நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் எங்களுக்கு முழு ஆதரவை அளித்துள்ளது. மேலும், நாங்கள் பெற்ற வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை எளிதுபடுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த செயற்பாட்டை மீறினால் நாடென்ற வகையில் பின்னோக்கி சென்று விடுவோம். சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை இழக்க நேரிடும். ஏனெனில் இலங்கை பல சந்தர்ப்பங்களில் வாக்குறுதிகளை அளித்து அவற்றை மீறியுள்ளது.

எனவே, இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டு, பொருளாதார பரிமாற்றச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு நமது பொருளாதார இலக்குகள் மற்றும் ஒப்பந்தங்களை சட்டப்பூர்வமாக்குகிறது. எமக்கு கடன் வழங்கிய நாடுகள் இலங்கை இந்தத் திட்டத்தைத் தொடரும் என்பதில் திருப்தியடைந்துள்ளதால் அவர்களின் ஆதரவை நாங்கள் பெறுகிறோம்.

எனவே இதை எங்களால் மாற்ற முடியாது. தற்போது இந்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எனவே, அரசியல் மேடைகளில் வீண் பேச்சு பேசுவதில் அர்த்தமில்லை. நாம் எது செய்வதாக இருந்தாலும் இந்தக் கட்டமைப்பிற்குள் செய்ய வேண்டும். எனவே, பொறுப்புகளை ஏற்காததால் தான் நீங்கள் எதிர்க்கட்சிக்கு சென்றீர்கள் என்பதை எதிர்க்கட்சிகளுக்கு கூற விரும்புறேன். சம்பிரதாய அரசியலில் ஈடுபட்டதாலே அந்த நிலை வந்தது. சவால்களை அச்சமின்றி ஏற்றுக்கொண்டதால்தான் இன்று ஆட்சியில் இருக்கிறோம். இப்போது நாங்கள் பெறுபேறுகளைக் காட்டியுள்ளோம். ஒரே பாதையில் ஒன்றாக பயணிக்க முன்வருமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்” என ஜனாதிபதி தெரிவித்தார்.

சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க :

”மக்களுக்கு காணி உரிமை வழங்கும் வேலைத்திட்டம் தற்போதைய ஜனாதிபதி, பிரதமராக பதவி வகித்த காலத்திலிருந்தே ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் அதற்கு தடையேற்படுத்தப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் பாதையைப் பார்க்கும் போது, அவர் வகித்த அனைத்து அமைச்சுப் பதவிகளின் கீழும் மக்களுக்கு பெருமளவில் சேவையாற்றப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர், இளைஞர் விவகார அமைச்சர் என்ற வகையிலும் சிறுவர்களுக்கும் இளையோருக்கும் அளப்பரிய சேவையாற்றியிருக்கிறார். இன்று ஜனாதிபதியாக உங்களுக்கு காணி உறுதிகளை வழங்குகிறார்.

எனது தந்தையின் காலத்தில் வழங்கப்பட்ட காணிப் பத்திரங்களைக்கூட உறுமய திட்டத்தின் கீழ் காணி உறுதிகளாக மாற்றிக்கொள்ள முடியும். இந்த காணி உறுதிப் பத்திரங்கள் உங்கள் பொருளாதாரத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் பலப்படுத்துவதாக அமையும்.” என்று தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்லாபிட்டிய :

”ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த இரு வருடங்களில் அமைதியாக புரட்சியொன்றை செய்திருக்கிறார். ஜனாதிபதி மட்டுமே சாதாரண மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க நினைக்கும் ஒரே தலைவராவார். இன்றைக்கு இரு வருடங்களுக்கு முன்பாக ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்து அனைவரும் வாழக்கூடிய சிறந்த சூழலை உருவாக்கினார்.

அதேபோல் இன்று காணி உறுதிகள் வழங்கப்படுகின்றன. குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு அரிசி மானியம் வழங்கப்படுகிறது. சாதாரண மக்களைக் கருத்தில் கொண்டே ஜனாதிபதி தனது திட்டங்களை செயற்படுத்துகிறார். உதவி தேவைப்படும் மக்களின் பக்கமாகவே ஜனாதிபதி என்றும் நிற்கிறார். தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 சம்பளத்தை பெற்றுக்கொடுத்துள்ளார். இதற்காக ஜனாதிபதி கோசங்களை எழுப்பவில்லை. மாறாக அமைதியாக ஒரு புரட்சி செய்திருக்கிறார். ” என்று தெரிவித்தார்.

வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய :

”காணிகளின் உரித்து கிடைத்ததன் மூலம், வறிய மக்களுக்கு தேவையான மூலதனம் இதனூடாக கிடைக்கிறது. காலணித்துவ காலத்தில் தோட்ட நிறுவனங்களிடம் காணிகளை ஒப்படைத்ததால் மக்களின் காணிகள் இல்லாம் போனது. இன்று நிரந்தர காணி உறுதிகள் வழங்கப்படுவதால் பொருளாதாரத்திற்கு அதிலிருந்து நேரடி பங்களிப்பு கிட்டும். கேகாலை மக்களின் தேயிலை, இறப்பர், கராம்பு போன்ற உற்பத்திகளுக்காக இந்த காணிகளைப் பயன்படுத்த முடியும். இதனால் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பு கிடைக்கும். உறுமய திட்டத்தினால் மக்களின் காணி உரிமை பாதுகாக்கப்படும். இதனூடாக வௌிநாட்டு வருமானத்தையும் பெருமளவில் ஈட்டிக்கொள்ள முடியும்.” என்று தெரிவித்தார்.

தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் :

”இப்பகுதி மக்களில் பெருமளவானர்களுக்கு நிரந்தர காணி உறுதிகள் இருக்கவில்லை. அவற்றை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பது புண்ணியமாகும். உறுமய திட்டத்திற்காக கிராம சேவகர்கள் பெரும் பணி ஆற்ற வேண்டியுள்ளது. அதனால் கிராம சேவகர்களை கருத்தில் கொண்டு இலத்திரனியல் சட்டத்திற்கான வரம்புகள் நாளைய தினம் அறிவிக்கப்படும். அதனால் கிராம சேவகர்கள் சான்றிதழ்களை ஒன்லைன் மூலம் விநியோகிக்க முடியும். இரண்டு வருடங்களுக்கு முன்பாக நெருக்கடியிலிருந்த நாட்டை இன்றைய நிலைக்கு கொண்டு வந்து புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்கான வழிகாட்டல்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே வழங்குகிறார். அதனால் கடந்த இரண்டு வருடங்கள் எதிர்கொண்ட நிலையைக் கருத்தில் கொண்டு எதிர்கால தேர்தல்களின் போது தீர்மானம் எடுக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜிகா விக்ரமசிங்க, உதயகாந்த குணதிலக, சுதத் மஞ்சுல, பொருளாதார அலுவல்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.