முக்கிய செய்தி
ஏழு வயது மகனை தரையில் அடித்து பலத்த காயம் ஏற்படுத்திய தந்தை கைது

போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஏழு வயது மகனை அடித்து பலத்த காயம் ஏற்படுத்திய தந்தை குறித்து சிறுவனின் தாய் பொலிஸில் முறைப்பாடு செய்தமையையடுத்து கிராண்ட்பாஸ் பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
கணவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும், போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு தன்னையும் பிள்ளையையும் தொடர்ந்து துன்புறுத்தியதாகவும் சம்பவத்தன்று தனது கணவர் பணம் கேட்டு தன்னை கொடூரமாக தாக்கியதாகவும், அருகில் வந்த தனது 7 வயது மகனை கொடூரமாக தாக்கியதாகவும் அந்த பெண் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார், சந்தேக நபரைக் கைது செய்ததுடன், படுகாயமடைந்த சிறுவனை கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் .
சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்காக பல சந்தர்ப்பங்களில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.