Connect with us

முக்கிய செய்தி

காஸா சிறுவர் நிதியத்திற்கான பல நன்கொடைகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

Published

on

காஸா மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஸ்தாபிக்கப்பட்ட காஸா குழந்தைகள் நிதியத்திற்கான (Children of Gaza Fund) நிதி நன்கொடைகள் இன்று (26) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டன.

கல்முனை ஹுதா ஜும்மா பள்ளிவாசல் 1,589,000 ரூபாவையும், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கிண்ணியா கிளை 5,300,000 ரூபாவையும், கல்முனை வலயக் கல்வி அலுவலகம் 3,128,500 ரூபாவையும், Sports First Foundation 300,000 ரூபாவையும் சிறுவர் நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளன.

முதற்கட்டமாக, இந்த ஆண்டு இப்தார் நிகழ்வை நடத்துவதற்கு அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்கள் ஒதுக்கிய நிதியில் இருந்து கிடைத்த ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை, ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் குழு மூலம் பலஸ்தீன அரசாங்கத்திடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் கையளித்தார்.

அத்துடன், “Children of Gaza Fund” நிதியத்திற்கு பங்களிக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு அமைய, அந்த நிதியத்திற்கு பெருமளவான நிதி கிடைத்துள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் குறித்த பணம் உத்தியோகபூர்வமாக பலஸ்தீன அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

நன்கொடையாளர்கள் 2024 ஏப்ரல் 30, வரை மாத்திரமே இந்த நிதியத்திற்கு தொடர்ந்து பங்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் நன்கொடைகளை வழங்க விரும்புவர்கள் இருப்பின், அந்த நன்கொடைகளை ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை வங்கியின் (7010) தப்ரோபன் கிளையில் (747) உள்ள கணக்கு இலக்கமான 7040016 க்கு வைப்பீடு செய்ய வேண்டும் என்றும் அது தொடர்பான பற்றுச் சீட்டை 077-9730396 என்ற எண்ணுக்கு WhatsApp ஊடாக அனுப்பி வைக்குமாறும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த நன்கொடைகளை கையளிப்பதற்கான நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வஜீர அபேவர்தன, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் சரத் குமார ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.