உள்நாட்டு செய்தி
மீண்டும் கோப்பி உற்பத்தியில் கவனம் செலுத்துகிறது இலங்கை!
இலங்கை கோப்பி பயிர்ச்செய்கைக்கு முன்னுரிமை அளித்து சிறப்பு “சிலோன் கோப்பி” மூலம் ஏற்றுமதிச் சந்தையைக் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.அரசாங்கம் கோப்பிபயிருக்கு முன்னுரிமை வழங்குவதற்கு அழைப்பு விடுத்துள்ளதுடன், குறிப்பாக மலையகத்தில் வெற்று நிலங்களை பயிர்ச்செய்கை நோக்கங்களுக்காக பயன்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தி வருகின்றது.கோப்பி பயிரிடுவதற்கு ஏற்ற நிலப்பரப்பு மற்றும் தட்பவெப்ப நிலைகளைக் கொண்டது இலங்கை, காலனித்துவ காலத்தில் தேயிலை பயிர்ச்செய்கைக்கு செல்வதற்கு முன்னர் கோப்பியே தேர்ந்தெடுக்கப்பட்டது.தற்போது, கோப்பிக்கான உலகளாவிய தேவை அதிகரித்து வருவதை கருத்திற்கொண்டு , இலங்கை கோப்பியை உற்பத்தி செய்து உலகிற்கு சந்தைப்படுத்துவதில் கவனம் செலுத்தவுள்ளது.இன்று கோப்பி பயிர்ச்செய்கையில் முக்கிய பங்காற்றுபவர்கள் மூன்று வருடங்களாக பயிர்ச்செய்கையில் இணைந்துள்ள போதிலும், வருடாந்த உற்பத்தி திறன் சுமார் 70 மெட்ரிக் தொன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக லங்கா கோப்பி சங்கத்தின் தலைவர் குஷான் சமரரத்ன தெரிவித்துள்ளார்.
கோப்பி பயிரிடுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், விவசாயிகளுக்குக் கல்வி கற்பிக்கவும் கோப்பி பயிர்ச்செய்கை நிபுணர்களைக் கொண்டு வர வேண்டும். மேலும் நீண்ட கால அடிப்படையில், ஏற்றுமதி சந்தையில் சிறிய அளவுகளுக்கு அதிக வருமானத்தை ஈட்டக்கூடிய பிரீமியம் தரமான முக்கிய சந்தையை வழங்குவதில் இலங்கை கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.