உள்நாட்டு செய்தி
நுவரெலியாவில் கடும் பனி மூட்டம்: சாரதிகளுக்கு எச்சரிக்கை

நுவரெலியாவில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக பனி, புகைமூட்டம் அதிகரித்துள்ளதுடன், பிரதான வீதிகளில் செலுத்தப்படும் வாகனங்களை ஒலி,ஒளியுடன் செலுத்துமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மற்றும் கந்தப்பளை பொலிஸார் இன்று (16) மாலை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
அதேநேரத்தில் நுவரெலியா, கந்தப்பளை,இராகலை,நானு ஓயா,டெஸ்போட் போன்ற பிரதேசங்களில் பனி மூட்டம் கடந்த இரண்டு தினங்களாக மாலை வேளையில் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், நுவரெலியா கண்டி பிரதான வீதியின் டொப்பாஸ் தொடக்கம் லபுக்கலை பிரதேசம் வரை பனி புகைமூட்டம் அதிகரித்துள்ளதால் குறித்த வீதியில் மிக அவதானத்துடன் வாகனங்களை செலுத்த நுவரெலியா பொலிஸார் வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் பிரதான வீதிகளில் செலுத்தும் வாகனங்களில் ஒலி,ஒளி எழுப்பி வாகனங்களை செலுத்த கந்தப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.