Connect with us

உள்நாட்டு செய்தி

“தோட்டத் தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்புக்காக அரசாங்கம் முன் நிற்கும்…”

Published

on

தோட்டத் தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்புக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட்ட அரசாங்கம் முன் நிற்பதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் கலாநிதி ரமேஷ் பதிரண நேற்று (9) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தோட்டத் தொழில் சங்கங்களுக்கும், முதலாளிமார்களுக்கும் இடையில் பல சந்தர்ப்பங்களில் தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த யோசனையை வழங்க முடிவு செய்யப்பட்டதாகவும், ஒருமித்த கருத்தை எடுக்க முடியவில்லை என்பதனால் சம்பள நிர்ணய சபையினால் தொழில் அமைச்சினூடாக தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தொழிலாளர்கள் சிரமத்திற்குள்ளாகும் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொண்டால் குறித்த முதலாளிமார்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் ரமேஷ் பத்திரன சுட்டிக்காட்டினார்.

வரவு செலவு திட்டத்தின் படி தோட்ட தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்துவது தொடர்பாக தோட்ட தொழிற்சங்கங்களுக்கும், தோட்ட உரிமையாளர்களுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இரு தரப்பினருக்கும் இடையில் ஒரு உடன்பாட்டிற்கு வரமுடியவில்லை.

எனவே இது தொடர்பாக ஒரு முடிவை எடுக்க அமைச்சரவை, தொழிற் சங்கத்தின் ஊடாக சம்பள நிர்ணய சபைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் ரமேஷ் பத்திரன அடுத்த வாரத்திற்குள் தொழில் அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்ட பின்னர் தோட்ட நிறுவனங்கள் ஊதியத்தை செலுத்த வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிறுவனங்கள் அனைத்தும் தோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபா கொடுப்பனவை செலுத்த சட்டப்படி கடமைப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் இது தொடர்பாக எழுகின்ற பிணக்குகளை கலந்தாலோசித்து தீர்ப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.